Sunday, 2 August 2026

விதி | சர்க்கம் – 050 (20)

Fate | Sarga-050 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேரில் ஏறிய லக்ஷ்மணன் துன்புறுவதைக் கண்ட சுமந்திரன்; துர்வாசர் சொன்னது...

சீதை செல்வதைப் பார்த்து சுமந்திரனிடம் பேசு லக்ஷ்மணன்

தீனமான {தளர்ந்த} உள்ளமுடைய லக்ஷ்மணனோ, ஆசிரமத்தில் பிரவேசிக்கச் செய்யப்பட்ட மைதிலியான சீதையைக் கண்டு, கோர சந்தாபத்தை {கடும் வருத்தத்தை} அடைந்தான்.(1) மேலும், மஹாதேஜஸ்வியானவன் {பேராற்றல்வாய்ந்த லக்ஷ்மணன்}, ராமனின் சாரதியும், மந்திரசாரதியுமான {ஆலோசனைகளில் தேரோட்டியைப் போல வழிகாட்டக் கூடியவனுமான} சுமந்திரனிடம் {பின்வருமாறு} கூறினான், "சீதையின் சந்தாபத்தால் {வருத்தத்தால்} உண்டான துக்கத்தைப் பார்ப்பீராக.(2) சுத்த சமாசாரமுடைய பத்தினியான {தூய ஒழுக்கமுடைய மனைவியான} ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைக்} கைவிடுவதைவிட ராகவருக்கு அதிக துக்கம்  உண்மையில் வேறென்ன இருக்கும்?(3) சாரதே, வைதேஹியைப் பிரிந்திருக்கும் ராகவரின் நிலை தைவத்தாலானதாக {விதியாலானதாக} நான் தெளிவாக கருதுகிறேன். தைவம் {விதி} நித்யம் கடப்பதற்கரியது.(4) 

குரோதமுற்ற எந்த ராகவர், கந்தர்வர்களுடன் கூடிய தேவர்களையும், ராக்ஷசர்களுடன் கூடிய அசுரர்களையும் அழிக்கவல்லவரோ, அவரே தைவத்துக்கு {விதிக்கு} இணங்கி நடக்கிறார்.(5) முன்பு பிதாவின் வாக்கியத்தால், மஹாவனமான ஜனமற்ற தண்டக வனத்தில் நவ பஞ்ச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} ராமர் வசித்திருந்தார்.(6) பௌரர்களின் {நகரமக்களின்} வசனத்தைக் கேட்டு, சீதையின் வெளியேற்றம், அதைவிடவும் {பதினான்காண்டு வனவாசத்தைவிடவும்} அதிக துக்கமானதாகவும், கொடுமையானதாகவும் எனக்குத் தோன்றுகிறது.(7) சூதரே, மீண்டும் அடைந்த மைதிலியை உடையவரும், தர்மத்தைச் சார்ந்தவருமான எவர்தான்,  ஈன அர்த்த வாதிகளான பௌரர்களால் {தாழ்ந்த கருத்துகளைப் பேசும் நகர மக்களால்} புகழைப் பறிக்கும் கர்மத்தில் {செயலில்} ஈடுபடுவர்?" {என்றான் லக்ஷ்மணன்}(8)

பிராஜ்ஞனான {அறிவுடையவனான} சுமந்திரன், லக்ஷ்மணனால் பேசப்பட்ட இந்தப் பலவிதமான சொற்களைக் கேட்டு, சிரத்தையுடன் {அக்கறையுடனும் நம்பிக்கையுடனும்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(9) "சௌமித்ரே, மைதிலி தொடர்பாக உம்மால் சந்தாபம் கொள்ள {வருத்தம் கொள்ள} வேண்டியதில்லை. இலக்ஷ்மணரே, உம் பிதாவின் {உமது தந்தை தசரதரின்} முன்னிலையில், விப்ரர்களால் {ஞானிகளான வேதியர்களால்}[1] இது முன்பு காணப்பட்டது {அறியப்பட்டது}.(10) 'இராமன், துக்கமயமானவனாக இருந்தாலும், உறுதியாக சௌக்கியத்தை அனுபவிப்பான். மேலும், மஹாபாஹுவானவன் {பெரும் தோள்களை உடைய ராமன்} உறுதியாக பிரியர்களிடமிருந்து {அன்புக்குரியவர்களிடமிருந்து} விப்ரயோகத்தை {பிரிவு நிலையை} அடைவான்' {என்று விப்ரர்களால் அறியப்பட்டது}.(11)  

[1] வி +  ப்ரு / ப்ர் - விரிவடைதல், முன்னேறுதல் என்ற அமைப்பிலிருந்து வந்ததாக விளக்கப்படுகிறது. வி - சிறப்பு, தனித்த, விரிவு, பிரிவு என்ற முன்னொட்டு. ப்ரு -செல்லுதல், முன்னேறுதல், விரிவடைதல். இதனால்: விப்ர - “சிறப்பாக விரிவடைந்த அறிவுடையவர்” - “ஞானத்தில் சிறந்தவர்” என்று பொருள். பின்னர் வழக்கில் இது குறிப்பாக “பிராமணர்” என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டது. விப்ர என்ற சொல்லின் “வேதியர்கள்” என்பது ஓரளவு பொருந்தினாலும், நேரடிப் பொருள் “ஞானி / அறிவுடையவர்” என்பதே ஆகும்.

தர்மாத்மாவான அந்த மஹான் {ராமர்}, நீண்ட காலப்போக்கில் உம்மையும், மைதிலியையும், சத்ருக்னபரதர்கள் இருவரையும் கூடக் கைவிடுவார்.(12) சௌமித்ரே, இஃது உம்மிடத்திலோ, பரதரிடத்திலோ கூட சொல்லக்கூடாது. துர்வாசர் எதைக் கூறினாரோ, அதுவே ராஜரால்  உங்களிடம் கூறப்பட்டது.(13) நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, மஹாஜனங்களின் சமீபத்திலும், மேலும் என்னுடைய {சமீபத்திலும்}, மேலும் வசிஷ்டரின் சந்நிதியிலும் {முன்னிலையிலும்} ரிஷியால் {துர்வாச முனிவரால்} இந்த வாக்கியம் கூறப்பட்டது[2].(14) 

[2] அதாவது பெரியோரின் அருகிலும், சுமந்திரனின் அருகிலும், வசிஷ்ட முனிவரின் முன்னிலையிலும் இது துர்வாச முனிவரால் தசரதனுக்குச் சொல்லப்பட்டது என்பது பொருள்.

புருஷரிஷபர் {தசரதர்}, ரிஷியின் {துர்வாச முனிவரின்} வசனத்தைக் கேட்டு, என்னிடம், "சூதா {தேரோட்டியே}, ஜனசந்நிதானத்தில் {மக்கள் முன்னிலையில்} உன்னால் இவ்வாறு ஒருபோதும் கூறப்படக்கூடாது" என்று கூறினார்.(15) சௌமியரே, அந்த லோகபாலரின் வாக்கியத்தை நன்கு ஏற்று, ஒருபோதும் உண்மையற்ற காரியம் செய்யக்கூடாது என்பது என் தரிசனமாகும் {கருத்தாகும்}.(16) சௌமியரே, ரகுநந்தனரே, என்னால் எவ்வகையிலும் உமது முன்னிலையில் சொல்லப்படக்கூடாது. ஒருவேளை உமக்குக் கேட்பதில் சிரத்தை {அக்கறையுடன் கூடிய நம்பிக்கை} இருந்தால் கேட்பீராக.(17) முன்பு நரேந்திரரால் ரஹஸ்யம் {ரகசியம்} கேட்கச் செய்யப்பட்டவன் நான் என்றாலும், 'தைவம் {விதி} கடப்பதற்கு அரியது' என்பதை எடுத்துக் கூறுவேன்.(18) எதனால் இவ்வாறான சோகத்துடன் கூடிய துக்கம் ஏற்பட்டதோ, அஃது உம்மால் பரதரிடமும், மேலும் சத்ருக்னரின் முன்னிலையிலும் கூடச் சொல்லப்படக்கூடாது" {என்றான் சுமந்திரன்}[3].(19)

[3] தசரதன் தனக்கு ஒரு ரகசியத்தைச் சொன்னான். அதை வெளிப்படுத்தக் கூடாது என்றான். ஆனால் இப்போது லக்ஷ்மணனின் துயரத்தைப் போக்கவும், விதியின் உண்மையை விளக்கவும் சுமந்திரன் அதைச் சொல்கிறான். அந்த ரகசியம் என்ன? துர்வாச முனிவர் வசிஷ்டர் முன்னிலையில் கூறிய தீர்க்கதரிசனம்: இராமன் நீண்ட காலம் அரசாள்வான். பின்னர் காலத்தின் கட்டளையால், சீதையைப் பிரிவான்; லக்ஷ்மணனையும் பிரிவான்; பரதன், சத்ருக்னன் ஆகியோரிடமிருந்தும் பிரிவு ஏற்படும். இவை எல்லாம் ராமனின் விருப்பத்தால் அல்ல; விதியின் இயக்கத்தால் நடைபெறும். இதைத்தான் சுமந்திரன் சொல்கிறான். அடுத்த சர்க்கத்தில் ரகசியத்தைச் சொல்வான். மேலும் இந்த சர்க்கம், அடுத்த சர்க்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகள் ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தில் இல்லை.

சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, அவனுடைய கம்பீர அர்த்த பதங்களை {சுமந்திரனின் ஆழ்ந்த பொருள் அமைந்த சொற்களைக்} கொண்ட மஹத்தான உரையைக் கேட்டு, பிறகு சூதனிடம் {சமந்திரனிடம்}, "உண்மையைக் கூறுவீராக" என்று கூறினான்.(20)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 050ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி