The curse and Shurpanakha | Sarga-024 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனால் கடத்தப்பட்ட பெண்களின் அழுகையும், புலம்பலும்; அவர்கள் அவனுக்கு அளித்த சாபம்; சூர்ப்பணகை, கரன் ஆகியோரை தண்டகாரண்யத்தில் வசிக்கச் செய்தது...
துராத்மாவான ராவணன் மகிழ்ச்சியுடன் திரும்பி வரும் வழியில்[1], நரேந்திரர்கள், ரிஷிகள் {மன்னர்கள், முனிவர்கள்}, தேவர்கள், கந்தர்வர்களின் கன்னிகைகளைக் கவர்ந்து சென்றான்.(1) பார்வைக்கு அழகான கன்னிகைகளையும், ஸ்திரீகளையும் கண்டதும், அந்த ராக்ஷசன் {ராவணன்}, அவர்களுடைய பந்துஜனங்களை {உற்றார் உறவினரைக்} கொன்றுவிட்டு, {புஷ்பக} விமானத்திலேயே அவர்களைச் சிறை பிடித்தான்.(2) இவ்வாறு பன்னக {நாக} கன்னிகைகளையும், ராக்ஷச, அசுர, மானுஷ, யக்ஷ, தானவ கன்னிகைகளையும் விமானத்தில் அவன் வலுக்கட்டாயமாக ஏற்றினான்.(3) துக்கத்தினால் ஒரே நேரத்தில் அவர்கள் யாவரும், சோகம், பயம் என்ற அக்னியில் {நெருப்பில்} உண்டான நெருப்பு ஜுவாலைகளுக்குத் துல்லியமாக {தீப்பொறி போல்} கண்ணீர் பெருக்கினர்.(4) நதிகளால் {நிறையும்} சாகரத்தைப் போலக் களங்கமற்றவர்களான அவர்களின் பயம், சோகம் ஆகியவற்றில் உண்டான மங்கலமற்ற கண்ணீரால் அந்த விமானம் நிறைந்தது.(5) நாக, கந்தர்வ கன்னிகைகளும், மஹரிஷிகளின் தனயைகளும் {மகள்களும்}, நூற்றுக்கணக்கான தைத்திய, தானவ கன்னிகைகளும் அந்த விமானத்தில் அழுது கொண்டிருந்தனர்.(6)






