Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...
இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2)





