Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...
இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3)
பிறகு அவன் {ராவணன்}, ரசாதலத்திற்குச் செல்லும் வழியில், வருணனால் நன்கு பாதுகாக்கப்படுவதும், தைத்திய, உரக கணங்களின் {கூட்டத்தாரின்} வசிப்பிடமாக இருப்பதுமான நீர்நிதியில் {நீரை நிதியாகக் கொண்ட கடலில்} பிரவேசித்தான்.(4) அவன் {ராவணன்}, வாசுகியால் பாலிதம் செய்யப்படும் {ஆளப்படும் நாகலோகத்தின்} போகவதி புரிக்குச் சென்று, நாகர்களை வசப்படுத்திக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் {ரத்தினங்கள் நிறைந்ததும், தைத்தியர்களுக்கு உரியதுமான} மணிமயீ புரிக்குச் சென்றான்.(5) அங்கே {மணிமயீபுரியில், பிரம்மனிடம்} வரங்களைப் பெற்றவர்களான நிவாதகவசர்கள் எனும் தைத்தியர்கள் {திதியின் வழித்தோல்களான அசுரர்கள்} வசித்து வந்தனர். அந்த ராக்ஷசன் {ராவணன்} அவர்களை எதிர்கொண்டு யுத்தம் செய்வதற்காக அறைகூவி அழைத்தான்.(6) விக்ராந்தர்களும் {வீரம் மிகுந்தவர்களும்}, பலசாலிகளும், யுத்த வெறி கொண்டவர்களுமான அந்த தைத்தியர்கள் அனைவரும், பெரும் மகிழ்ச்சியுடன் நானாவித ஆயுதங்களை ஏந்திக் கொண்டு அங்கே வந்தனர்.(7) மேலும் குரோதமடைந்த ராக்ஷசர்களும், தானவர்களும் {தனுவின் மைந்தர்களான அசுரர்களும்}, சூலங்கள், திரிசூலங்கள், குலிசங்கள் {வஜ்ராயுதங்கள்}, பட்டிசங்கள் {வல்லயங்கள்}, வாள்கள், பரசுகள் {கோடரிகள்}ஆகியவற்றைக் கொண்டு அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தாக்கிப் பிளந்தனர்.(8) அங்கே {போர்க்களத்தில்} இவ்வாறு யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் {காலம்} கடந்து சென்றாலும், இருதரப்பினரில் எவருக்கும் விஜயமோ, வீழ்ச்சியோ {வெற்றியோ, தோல்வியோ} ஏற்படவில்லை.(9)
பின்னர், மூவுலகங்களுக்கும் கதியாக {புகலிடமாக} இருப்பவனும், அழிவற்ற தேவனுமான பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, தன் சிறந்த விமானத்தில் அமர்ந்து கொண்டு அங்கே துரிதமாக வந்து சேர்ந்தான்.(10) முதிர்ந்தவனான பிதாமஹன் {பிரம்மன்}, நிவாதகவசர்களின் அந்த ரணகர்மத்தை {போர் நடவடிக்கையைத்} தடுத்து நிறுத்தி அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(11) "ஸுராசுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும் கூட} யுத்தத்தில் இந்த ராவணனை வெல்வது நிச்சயம் சாத்தியமல்ல. {அதைப் போலவே} நீங்களும், அமரர்களாலும் {தேவர்களாலும்}, தானவர்களாலும் {அசுரர்களாலும்} அழிக்கப்பட முடியாதவர்கள்.(12) உங்களுக்கு இந்த ராக்ஷசனுடன் சகித்வமே {ராவணனுடன் நட்பேற்படுவதே} பொருத்தமானது. நண்பர்களுக்குள் சர்வ அர்த்தங்களும் பிரிக்கப்பட முடியாதவை {பொருள்கள் அனைத்தும் பொதுவானவை}. இதில் சந்தேகமில்லை" {என்றான் பிரம்மன்}.(13)
பிறகு, அங்கே {அந்தப் போர்க்களத்தில்} ராவணன், நிவாதகவசர்களுடன் சேர்ந்து அக்னி சாக்ஷியாக சக்யம் செய்து கொண்டான் {நிவாதகவசர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான்}. அப்போது, அவர்கள் பிரீதிமான்கள் ஆகினர் {இருதரப்பும் பகைமறந்து பரஸ்பரம் மகிழ்ச்சியும் கொண்டனர்}.(14) பிறகு தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, நியாயப்படியான அர்த்தங்களை {பொருள்களைப்} பெற்றுக் கொண்டு, தன் சொந்த நகரத்திற்கும், அந்த நகரத்திற்கும் வேறுபாடின்றி அவர்களுடன் ஒரு வருட காலம் தங்கியிருந்து, அவர்களின் பிரியத்தையும் பெற்றான்.(15) பிறகு, மாயைகளில் ஒரு நூறையும் கற்று முடித்தான். நீரின் இந்திரனுடைய புரத்தை {வருணனின் நகரத்தைத்} தேடி ரஸாதலத்தில் சுற்றித் திருந்தான்.(16) பிறகு, காலகேயர்களால் ஆளப்பட்டு வந்த அச்மம் என்றழைக்கப்படும் நகரத்திற்கு {பாறை நகரத்திற்குச்} சென்று, அங்கே தங்கள் பலத்தில் செருக்குடைய காலகேயர்களைக் கொன்றான்.(17) அந்தப் போர்க்களத்தில் இருந்தபோது, சூர்ப்பணகையின் பர்த்தாவும் {கணவனும்}, தன் மைத்துனனும், பெரும் பலம் மிக்கவனும், அந்த பலத்தில் செருக்குடையவனும், போர்க்களத்தில் தன் நாவால் {தன் உதடுகளை} நக்கிக் கொண்டிருந்தவனுமான ராக்ஷசன் வித்யுஜ்ஜிஹ்வனைத் தன் வாளால் வெட்டித் துண்டாக்கினான்.(18) அவனை {வித்யுத்ஜிஹ்வனை} ஒரு முஹூர்த்தத்திற்குள் வென்று {வீழ்த்திய பின்னர்}, நானூறு தைத்தியர்களையும் {காலகேய அசுரர்களையும்} கொன்றான்.(19)
பிறகு, அந்த ராக்ஷசாதிபன் {ராவணன்}, வெண்மேகத்தின் ஒளியைக் கொண்டதும், கைலாசத்தை {கைலாச மலையைப்} போல் ஒளிர்வதுமான வருணனின் திவ்ய ஆலயத்தை {தெய்வீக மாளிகையைப்} பார்த்தான்.(20) சுரபி {காமதேனு} எனும் பசுவானவள், பால் சுரந்தபடியே அங்கே {வருணலோகத்தில்} நின்று கொண்டிருந்தாள். எவளுடைய பால் பெருக்கினால் க்ஷீரசாகரமும் {பாற்கடலும்},(21) பசுக்களும், சிறந்த விருஷபேந்திரங்களும் {தலைமைக் காளைகளும்} தோன்றினவோ, எவளிடம் இருந்து குளிர்ந்த கதிர்களைக் கொண்டவனும், நிசாகரனுமான {இரவை உண்டாக்குபவனுமான} சந்திரன் உதித்தானோ, அவளை அங்கே {அந்தப் பசுவை அந்த வருணலோகத்தில்} ராவணன் கண்டான்.(22) பாலின் நுரையை {மட்டுமே} உண்ணும் பரமரிஷிகள் ஜீவிப்பதற்கு எவளை முழுமையாகச் சார்ந்திருக்கின்றனரோ, {தேவர்களுக்கான} அம்ருதமும்[1], ஸ்வதா போஜிகளுக்கான ஸ்வதாவும் எவளிடம் உண்டாகின்றனவோ {ஸ்வதா என்ற மந்திரச் சொல்லுடன் அளிக்கப்படும் பொருளை உண்ணும் பித்ருக்களுக்கான [மூதாதையர்களுக்கான] உணவும் எவளிடம் உண்டாகின்றனவோ},(23) உலகத்தின் நரர்கள், சுரபி என்ற பெயரில் எவளை அழைக்கிறார்களோ, அத்தகைய பரம அற்புதமானவளை {பரம அற்புதமான சுரபியை / காமதேனுவை} ராவணன் பிரதக்ஷிணஞ் செய்தான் {வலம் வந்து வணங்கினான்}[2].(24)
[1] "அமிர்தமும், தேவர்கள் உண்ணும் சுரையும் அவளிடமே {சுரபியிடமே} உற்பத்தியாகின்றன" என்று நாம் ஒப்பிடும் பதிப்புகளில் ஒரு பதிப்பில் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இது ஒருவகை மது" என்றிருக்கிறது. மூலத்தில், "யம் ஸமாஷ்ரித்ய ஜீவந்தி பேனபா꞉ பரமர்ஷய꞉ அம்ருதம் யத்ர சோத்பன்னம் ஸ்வதா ச ஸ்வதபோஜினாம்" என்றிருக்கிறது. இதில் எங்கும் சுரை, அல்லது சுராபானம் என்பது குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.
[2] பைவிரி நாகத்து அணைமேல் பரன்துயில்கொள்பரந்த பாற்கடலில்தெய்வ நெடுஞ் சுரபிதனைச் சென்னிநிலம்உற வணங்கித் திறலின் மிக்கமைவரைபோல் மெய் அரக்கன் வந்து உனக்குத்தோற்றேன் என்று உரைத்தல் அன்றிவெய்யமர்செய்குதல் செய்யாது எங்கு ஒளித்தான்வருணன் என விளம்பும் வேலை- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 413ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: படம் விரிந்த பாம்பணைமேல் பரன் {திருமால்} துயில் கொள்ளும் பரந்த பாற்கடல் {அந்தக் கடலைக் கடைந்த போது} தந்தவளும், தெய்வத் தன்மை வாய்ந்தவளும், உயர்ந்தவளுமான சுரபியை {காமதேனுவைத்} தலை நிலத்தில் பட வணங்கிவிட்டு, வலிமை வாய்ந்தவனும், கரிய மலை போன்ற உடலைக் கொண்டவனுமான ராக்ஷசன் {ராவணன், வருணலோகத்தவரை} நெருங்கி வந்து, "உனக்குத் தோற்றேன் என்று சொல்லட்டும், அல்லது கொடும்போர் புரியட்டும். இவற்றைச் செய்யாமல் வருணன் எங்கே ஒளிந்து கொண்டான்" என்று கேட்டான்.
பிறகு அவன் {ராவணன்}, மஹாகோரமானதும் {பேரச்சத்தை விளைவிப்பதும்}, பலவிதங்களிலான பலங்களால் {பல்வேறு படைகளால்} பாதுகாக்கப்படுவதுமான அதில் {வருணனின் மாளிகைக்குள்} பிரவேசித்து, அங்கே சரத் கால வெண்மேகத்தின் நிறத்திலான நூற்றுக் கணக்கான {நீர்த்} தாரைகளால் சூழப்பட்டதும், நித்யம் மகிழ்ச்சி பொங்குவதுமான வருணனின் உத்தம கிருஹத்தைக் கண்டான்.(25) அந்தப் போர்க்களத்தில் பலாதியக்ஷர்களால் {வருணனின் படைத்தலைவர்களால்} தாக்கப்பட்ட பிறகு, அவர்களைக் கொன்றுவிட்டு, {அங்கிருந்த} படைவீரர்களிடம் {பின்வருமாறு} கூறினான், "ராஜாவிடம் {வருணனிடம்} சீக்கிரம் செய்தியை {பின்வருமாறு} அறிவிப்பீராக.(26) 'இராவணன், யுத்தத்தை நாடி வந்திருக்கிறான். அவனுக்கு யுத்தத்தைக் கொடுப்பீராக. அல்லது, "நான் வெல்லப்பட்டேன்" என்று கைகளைக் கூப்பிவிட்டால், உமக்குப் பயமில்லை' என்று சொல்வீராக" {என்றான் ராவணன்}.(27)
இதற்கிடையில், மஹாத்மாவான வருணனின் புத்திர, பௌத்திரர்களும் {மகன்களும், பேரன்களும்}, குறிப்பாக கௌவும், புஷ்கரனும் {கௌ, புஷ்கரன் எனும் பெயர்களையுடைய மகன்களும்} குரோதத்துடன் வெளியே வந்தனர்.(28) வீரிய குணத்தைக் கொண்டவர்களான அவர்கள் {வருணனின் அந்த வாரிசுகள்}, தங்களின் சொந்தப் படைகளால் சூழப்பட்டவர்களாக, உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போல் ஒளிர்பவையும், விரும்பிய வேகத்தில் செல்லக்கூடியவையுமான ரதங்களை {தேர்களில் குதிரைகளைப்} பூட்டினர்.(29) பிறகு, ஸலிலேந்திரனின் புத்திரர்களுக்கும் {நீரின் தலைவனான வருணனின் மகன்களுக்கும்}, மதிமிக்கவனான ராவணனுக்கும் இடையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்துவண்ணம் கொடூர யுத்தம் தொடங்கியது.(30)
மஹா வீரியமிக்க ராக்ஷசன் தசக்ரீவனின் அமைச்சர்களால் வாருண பலம் முழுமையும் {வருணனின் படை முழுவதும்} க்ஷண நேரத்தில் முற்றிலும் வீழ்த்தப்பட்டது.(31) அப்போது வருணனின் மகன்கள், போர்க்களத்தில் தங்கள் சொந்த பலம் சரஜாலங்களால் {தங்கள் சொந்தப் படை, ராக்ஷசர்களின் கணைக் கூட்டங்களால்} துன்புறுத்தப்படுவதைப் பார்த்து, ரண கர்மத்திலிருந்து {போர் நடவடிக்கையிலிருந்து} பின்வாங்கினார்கள்.(32) அவர்கள் மஹீதலத்தில் {பூமியின் பரப்பில்} இருந்தபோது, புஷ்பகத்தில் {விமானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த} ராவணனைக் கண்டு, சீக்கிரமாகச் செல்லக்கூடிய தங்கள் சியந்தனங்கள் {தேர்கள்} மூலம் உடனே ஆகாசத்தில் நுழைந்தனர்.(33) அவர்கள் {வருணபுத்திரர்கள்} துல்லியமான ஸ்தானத்தை {சமமான இடத்தை / ஏற்ற இடத்தை / ஒரே உயரத்தை} அடைந்த பிறகு, அவர்களுக்கிடையிலான ஆகாச யுத்தம், தேவ தானவர்களுக்கிடையிலானதைப் போல மஹத்தானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது.(34) அதன் பிறகு அவர்கள், அந்த யுத்தத்தில் பாவகனுக்கு {நெருப்புக்கு} ஒப்பான சரங்களால் ராவணனை முகம் திரும்பச் செய்து {புறமுதுகிடச் செய்து}, பெரும் மகிழ்ச்சியடைந்து, விதவிதமான வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.(35)
அப்போது, வீரனான மஹோதரன், ராஜன் {ராவணன்} தாக்கப்படுவதைக் கண்டு, குரோதமடைந்து, மிருத்யு {மரண} பயத்தைக் கைவிட்டு, யுத்தம் செய்யும் ஆவலுடன் {எதிரிகளை} நோக்கினான்.(36) அந்த யுத்தத்தில், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடியவையும், பவனனுக்கு {காற்றுக்கு} ஒப்பானவையுமான அந்த பயங்கரமானவை {வருணனுடைய மகன்களின் தேர்களில் பூட்டப்பட்ட குதிரைகள்}, மஹோதரனின் கதையால் தாக்கப்பட்டு, பூமியை நோக்கி வீழ்ந்து மடிந்தன.(37) அந்த வருண புத்திரர்களின் படைவீரர்களையும், நூற்றுக்கணக்கான ஹயங்களையும் {குதிரைகளையும்} கொன்ற பிறகு, அவர்கள் ரதங்களற்றவர்களாக {தேர்களை இழந்தவர்களாக ஆகாசத்தில்} நிற்பதைப் பார்த்த உடனேயே அவன் மஹாநாதம் செய்தான் {மகோதரன் வெற்றி முழக்கத்தை எழுப்பினான்}.(38) மஹோதரனால் தாக்கி நொறுக்கப்பட்ட அவர்களின் ரதங்கள் {வருண புத்திரர்களின் தேர்கள், அவற்றில் பூட்டப்பட்டிருந்த} அஷ்வங்களுடனும் {குதிரைகளுடனும்}, கொல்லப்பட்ட சாரதிகளுடனும் {தேரோட்டிகளுடனும்} பிருத்வீதலத்தில் {தரையில்} வீழ்ந்தன.(39)
மஹாத்மாவான அந்த வருண புத்திரர்களோ, தங்கள் ரதங்களைக் கைவிட்டு, ஆகாசத்திலேயே நிலைத்து நின்று, தங்கள் சொந்தப் பிரபாவத்தினால் சற்றும் கலக்கடமடையாமல் இருந்தனர்.(40) {தங்கள் கைகளில் இருந்த} தனுசுகளில் நாணேற்றிக் கொண்டு, மஹோதரனை {கணைகளால்} தாக்கித் துளைத்துவிட்டு, குரோதத்துடன் ஒன்றாகத் திரண்டு சமரில் {அந்தப் போர்க்களத்தில்} ராவணனை நோக்கிப் பாய்ந்தனர்.(41) குரோதமடைந்த அவர்கள் {வருண புத்திரர்கள்}, தங்கள் சாபத்திலிருந்து {வில்லிலிருந்து} ஏவப்படுபவையும், வஜ்ரத்திற்கு {இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு} ஒப்பானவையுமான பயங்கர சாயகங்களினால் {கணைகளால்}, மேகங்கள் ஒரு மஹாகிரியை {மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பெரும் மலையைப் பிளப்பதைப்} போல, அவனை {ராவணனைப்} பிளந்தனர்.(42)
அப்போது குரோதமடைந்த தசக்ரீவன், காலாக்னியைப் போலச் சீறியெழுந்து, மஹா கோரமான சர வர்ஷத்தால் அவர்களின் மர்மங்களைத் தாக்கினான் {கணை மழையால் வருணனுடைய படைவீரர்களின் உயிர் நிலைகளைத் தாக்கினான்}.(43) அதனால் {ராவணனின் அந்தத் தாக்குதலால்} திடீரெனப் பதாதிகள் {அங்கிருந்த காலாட்படை வீரர்கள்} தளர்ந்து சரிந்த பிறகும், {அவர்களின் மேல்} விசித்திரமான முசலங்கள் {உலக்கைகள்}, நூற்றுக்கணக்கான பல்லங்கள் {ஈட்டி போன்று கூர்முனைக் கணைகள்},(44) பட்டிசங்கள், சக்திகள், சதக்னிகள் ஆகியவற்றையும், அதே போலத் தோமரங்களையும், வானத்தில் அவர்களுக்கு மேல் நின்றுகொண்டிருந்த அந்த வெல்வதற்கரியவன் {ராவணன்} பொழிந்தான்.(45) பலத்த காயமடைந்த பதாதி வீரர்கள் {காலாட்படை வீரர்கள்}, அறுபது வயதான குஞ்சரங்கள் {முழு வளர்ச்சியடைந்து மதம்பிடித்த யானைகள்} பெருஞ்சேற்றில் சிக்கித் தவிப்பதைப் போல, நிலைகுலைந்து விழுந்தனர்.(46)
மஹா ஓஜஸ்ஸுடன் கூடிய {வருணனின்} மகன்கள், தளர்ந்து, நிலைகுலைந்து தவிப்பதைக் கண்டு, பெரும் மகிழ்ச்சியடைந்த ராவணன், பெரும் மேகத்தைப் போல நாதம் செய்தான்.(47) பிறகு அந்த ராக்ஷசன் {ராவணன்} மஹாநாதத்தை எழுப்பியபடியே, {மழைத்} தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல, நானாவித ஆயுதங்களைக் கொண்டு வாருணர்களை {வருணனின் மகன்களை / வருணனின் படையினரைத்} தாக்கினான்.(48) பிறகு, அனைவரும் முகம் திரும்பி தரணீதலத்தில் விழுந்ததும் {புறமுதுகிட்டுத் தரையில் விழுந்ததும்}, போர்க்களத்தில் இருந்து, தங்கள் சொந்த ஆட்களால் அவர்கள் {வருணனின் மகன்கள்} சீக்கிரமாகத் தங்கள் தங்கள் கிருஹங்களுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டனர்.(49)
அப்போது அந்த ராக்ஷசன் {ராவணன்} அங்கிருந்தவர்களிடம், "வருணனிடம் {நான் போரில் வென்ற செய்தியை} அறிவிப்பீராக" என்று கூறினான்.(50) பிரஹஸன் என்ற பெயரைக் கொண்ட வருணனின் மந்திரி, ராவணனை நோக்கி {பின்வருமாறு} கூறினான், "மஹாராஜா ஜலேஷ்வரர் {வருணன்}, பிரம்மலோகத்திற்குச் சென்றிருக்கிறார்.(51) வீரரே, எவரை நீர் அழைக்கிறீரோ, அந்த வருண மன்னர், காந்தர்வம் கேட்க {இசைப்பாடல்கள் கேட்க பிரம்மலோகம்} சென்று விட்ட நிலையில், உமது வீண் முயற்சியால் பயன் என்ன? {இங்குள்ளவர்களில்} யாவர் ஆற்றல்மிகு வீரர்களோ, அந்த {வருண} குமாரர்கள் அனைவரும் {உம்மால்} வீழ்த்தப்பட்டனர்" {என்றான்}.(52)
இதைக் கேட்ட அந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்}, தன் பெயரை அறிவித்துக் கொண்டு, மகிழ்ச்சி நாதம் செய்தபடியே வருணாலயத்தைவிட்டு வெளியேறினான்.(53) அந்த ராக்ஷசன், எந்தப் பாதையில் வந்தானோ, அதே வழியில் திரும்பி, நபஸ்தலத்தை {ஆகாயத்தை} அடைந்து லங்கையை நோக்கிச் சென்றான்.(54)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 023ல் உள்ள சுலோகங்கள்: 54
| Previous | | Sanskrit | | English | | Next |
