Monday, 1 June 2026

இயமன் | சர்க்கம் – 022 (51)

Yama | Sarga-022 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இயமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; யமனை வேண்டிய பிரம்மன்; யமன் மறைந்தது...

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana

அந்த வைவஸ்வதப் பிரபு {சூரியனின் மகனும், தலைவனுமான யமன்}, அவனுடைய மஹாநாதத்தை {ராவணனின் பெரும் முழக்கத்தைக்} கேட்டுவிட்டு, தன் சத்ரு விஜயமடைந்தான் என்றும், தன் சொந்த பலம் {படை} அழிவடைகிறது என்றும் கருதினான்.(1) மேலும் அவன் {யமன்}, தன் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன், தன் சூதனிடம் {தேரோட்டியிடம்}, "இந்தத் தேரைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக" என்று கூறினான்.(2) 

அப்போதே அவனுடைய சூதன் {யமனின் தேரோட்டி}, திவ்யமான மஹாரதத்தைக் கொண்டு வந்து நின்றான். மஹாதேஜஸ்வியான அவனும் {யமனும்} அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தான். அவனுக்கு முன்னால் பிராசம், முத்கரம் ஆகியவற்றை ஏந்தியபடி {யமனின் தளபதியான} மிருத்யு நின்றான்.(3) இந்த அழிக்க முடியாத மூவுலகங்களும் எவனால் சுருக்கப்படுகின்றனவோ {யுகாந்தத்தில் அழிக்கப்படுகின்றனவோ}, அந்த யமனின் முதன்மை ஆயுதமும், திவ்ய தேஜஸ்ஸினால் ஜுவலிக்கும் அக்னியைப் போன்றதுமான காலதண்டம்[1] மூர்த்திமானாக {உடல் கொண்டு வந்து} அருகில் வந்து நின்றது.(4) அதன் பக்கவாட்டுகளில் எவ்வித இடைவெளியுமின்றி காலபாசங்கள் {பாசக் கயிறுகள்} நிலைபெற்றிருந்தன.(5) பாவகனின் ஸ்பரிசத்திற்கு ஒப்பான மூர்த்தத்துடன் கூடிய முத்கரமும் {நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான உஷ்ணமும், ஒளியும் கொண்ட சம்மட்டி ஆயுதமும் உடல் கொண்டு வந்து அங்கே} நின்றது.(6) அப்போது, காலன் {யமன்}, இவ்வாறு சர்வ லோகங்களுக்கும் பயத்தை உண்டாக்கும் வகையில் குரோதத்துடன் இருப்பதைக் கண்டதும், மூவுலகங்களும் கலக்கமடைந்தன; திவௌகசர்களும் {தேவலோகவாசிகளும்} நடுங்கினர்.(7)

[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது தண்டனை வழங்குவதற்கான யமனின் தண்டக்கோலாகும்" என்றிருக்கிறது.

பிறகு அந்த சூதன் {தேரோட்டி}, அழகிய பிரபையுடன் கூடிய அந்த அஷ்வங்களை {குதிரைகளை} வேகமாகச் செலுத்தினான். பயங்கர போர்க்குரலுடன் கூடியவனும் {யமனும்}, எங்கே ராக்ஷசாதிபதி {ராவணன்} இருந்தானோ அங்கே சென்றான்.(8) ஹரிஹயங்களுக்கு {இந்திரனின் பச்சைக் குதிரைகளுக்கு} ஒப்பானவையும், மனத்தின் வேகத்திற்குத் துல்லியமானவையுமான அவனுடைய அந்த ஹயங்கள் {யமனின் குதிரைகள்}, எங்கே அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்ததோ அங்கே ஒரு முஹூர்த்தத்திற்குள் யமனைக் கொண்டு சேர்த்தன.(9) அத்தகைய பயங்கரத் தோற்றத்தைக் கொண்டதும், {மரண தேவனான} மிருத்யுவுடன் கூடியதுமான ரதத்தை {யமனின் தேரைப்} பார்த்த ராக்ஷசேந்திரனின் {ராவணனின்} அமைச்சர்கள் திடீரெனச் சிதறி ஓடினர்.(10) இலகுவான சித்தத்தைக் கொண்ட {மனவலிமையற்றவர்களான} அவர்கள், சுயநனவை இழந்தவர்களாக, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, "இங்கே போரிடுவதற்கு நாம் சமர்த்தர்களல்லர்" என்று தங்களுக்குள் கூறியபடியே திசைகளை நோக்கி {எங்கும்} ஓடிச் சென்றனர்.(11) 

ஆனால், அந்த தசக்ரீவனோ, அத்தகையதும் {பயங்கரமானதும்}, உலகங்களுக்கு பயத்தை உண்டாக்குவதுமான ரதத்தைப் பார்த்த பின்பும் சற்றும் கலங்கினானில்லை. அதைப் போலவே, கொஞ்சமேனும் பயத்திற்கும் அவன் ஆட்பட்டானில்லை.(12) கடுங்குரோதமடைந்த அந்த யமனோ, ராவணனை அணுகி, சக்திகளையும், தோமரங்களையும் ஏவினான். அவை ராவணனின் மர்மங்களை {உயிராதாரமான உடலின் முக்கியப் பகுதிகளைப்} பிளந்தன.(13) அப்போது அந்த ராவணனோ, ஸ்வஸ்தனாக {சற்றும் சோர்வடையாத நலத்துடன்}, மழைமேகம் மழையைப் பொழிவதைப் போலத் திண்ணமாக அந்த வைவஸ்வதனின் ரதத்தின் மீது சரவர்ஷத்தைப் பொழிந்தான் {சூரியனின் மகனான யமனின் தேர் மீது கணை மாரியைப் பொழிந்தான்}.(14) பிறகு, மஹா சக்திகளாலும் {பெரும் சக்தி ஆயுதங்களாலும்}, சரங்களாலும் அவனது பெரும் மார்பு தாக்கப்பட்டது. அந்த ராக்ஷசன் {ராவணன்}, சல்லியங்களால் பீடிக்கப்பட்டவனாக {கணைமுனைகளால் துன்புற்று} மறுதாக்குதல் தொடுக்கும் சக்தியற்றவனானான்.(15) இவ்வாறு அமித்ரகர்ஷிணனான {பகைவரை அழிப்பவனான} யமன், போர்க்களத்தில் ஏழு இரவுகள் நானாவித ஆயுதங்களைக் கொண்டு, தன் ரிபுவை {பகைவனான ராவணனை} சுயநனவற்றவனாகவும், முகம் திரும்பியவனாகவும் {புறமுதுகிடுபவனாகவும்} ஆக்கினான்.(16)

அப்போது, யமராக்ஷசர்கள் இருவருக்குமிடையில் {யமனுக்கும், ராவணனுக்கும் இடையில்} கொடும்போர் நடந்தது. வீரா {ராமா}, ஜயத்தை {வெற்றியை மட்டுமே} பெரிதும் விரும்புகிறவர்களான அவர்கள், போர்களில் சற்றேனும் திரும்பும் இயல்பற்றவர்களாக இருந்தனர்.(17) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகள் ஆகியோர் பிரஜாபதியை {பிரம்மனை} முன்னிட்டுக் கொண்டு அந்தப் போர்க்களத்தில் ஒன்றுகூடினர்.(18) அப்போது, ராக்ஷசர்களில் முக்கியனும் {ராவணனும்}, பிரேதங்களின் ஈஷ்வரனும் {யமனும்} கடுங்குரோதமடைந்ததால், உலகங்களுக்கு சம்வர்த்தத்தை {அழிவு காலத்தைப்} போன்ற நிலை ஏற்பட்டது.(19) பிறகு, ராக்ஷசேந்திரனும் {ராவணனும்}, இந்திரனின் அசனியை {வஜ்ராயுதத்தைப்} போன்ற பிரபையுடன் {ஒளியுடன்} கூடிய சாபத்தில் {வில்லில்} நாணேற்றி, ஆகாசத்தை இடைவெளியற்றதாக மாற்றும் வகையில் பாணங்களைப் பொழிந்தான்.(20) நான்கு கணைகளால் மிருத்யுவையும் {யமனின் தளபதியான மரண தேவனையும்}[2], ஏழால் சூதனையும் {ஏழு கணைகளால் தேரோட்டியையும்} தாக்கிவிட்டு, சீக்கிரமே நூறாயிரங்களால் {ஒரு லக்ஷம் கணைகளால்} யமனை அவனது மர்மங்களில் {முக்கிய உடலுறுப்புகளில்} தாக்கினான்.(21)

[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மிருத்யு (மரணம்) என்பது பொதுவாக யமனின் மறுபெயராகக் கருதப்பட்டாலும், இங்கு அது தனியான {உடல் கொண்டு வந்த} மற்றொருவனாக விவரிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

அப்போது, குரோதமடைந்த யமனின் வதனத்திலிருந்து {முகத்திலிருந்து} பெருமூச்சுடன் சேர்ந்து, ஜுவாலை மாலைகளுடனும் {நெருப்பு வளையங்களுடனும்}, தூமத்துடனும் {புகையுடனும்} கூடிய கோபபாவகம் {கோபாக்னி} வெளிப்பட்டது.(22) அப்போது, {அங்கிருந்த} தேவ, தானவர்களின் முன்னிலையில், அந்த ஆச்சரியத்தைப் பார்த்த மிருத்யுவும், காலனும், பெரும் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் {போர் ஆவேசமும்} அடைந்தவர்களாக மாறினர்.(23) 

இன்னும் குரோதமடைந்த மிருத்யு, வைவஸ்வதனிடம் {சூரியன் மகனான யமனிடம் பின்வருமாறு} கூறினான், "பாபியான இந்த ராக்ஷசனை நான் கொல்லும் மட்டும் இந்தப் போர்க்களத்தில் என்னை {கட்டுப்படுத்தாமல்} விடுவீராக. வரம்புகள் {இயற்கையின் நியதிகள்} மாறாதன என்பதால் இன்று இந்த ராக்ஷசன் மடிவான்.(24) 

{ஏனெனில்} ஹிரண்யகசிபு, ஸ்ரீமான் நமுசி, அப்படியே சம்பரன், விசந்தி, தூமகேது ஆகியோரும், வைரோசனனான பலியும் {விரோசனனின் மகனான மகாபலியும்},(25) தம்புகன், தைத்திய மஹாராஜன் விருத்திரன் {விருத்திராசுரன்} ஆகியோரும், அப்படியே பாணனும் {பாணாசுரனும்}, ராஜரிஷிகளும், சாஸ்திர வித்தகர்களும், கந்தர்வர்களும், மஹா உரகர்களும்,(26) ரிஷிகள், பன்னகர்கள், தைத்தியர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், அதே போல அப்சரஸ் கணங்களும், யுகாந்த சுழற்சியில் {பிரளய காலத்தில்} மஹா அர்ணவங்களுடன் கூடிய பிருத்வியும் {பெருங்கடல்களுடன் கூடிய பூமியும்},(27) {அதன்} பர்வதங்கள் {மலைகள்}, சரித்துகள் {ஆறுகள்}, மரங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்ததாகவும், {முன் சொன்ன} இவர்கள் யாவரும், வெல்வதற்கரியவர்களான இன்னும் பல பலவான்களும் {என்னால்} அழிக்கப்பட்டனர்.(28) 

{இவர்கள் யாவரும்} என் பார்வையால் வீழ்த்தப்பட்டவர்கள். {அப்படியிருக்க} இந்த நிசாசரனை {இரவுலாவியான ராவணனைக்} குறித்து சொல்லவும் வேண்டுமோ?(29) சாது {நன்று}, தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் இவனைக் கொல்லும் மட்டும் என்னை {கட்டுப்படுத்தாமல்} விடுவீராக. எத்தகைய பலவானாக இருப்பினும் என்னால் பார்க்கப்பட்டு ஜீவித்தவன் எவனும் இல்லை.(30) இஃது என் பலம் என்பதல்ல. இஃது {இந்த வரம்பு} இயல்பாகவே வரையறுக்கப்பட்டது. என்னால் பார்க்கப்பட்டவன், ஒரு முஹூர்த்த காலம் கூட ஜீவித்திருக்க மாட்டான்" {என்றான் மிருத்யு}.(31)

அவனது {மிருத்யுதேவனின்} இத்தகைய வசனத்தைக் கேட்ட பிரதாபவானான தர்மராஜன் {பேராற்றல் வாய்ந்தவனான யமன்}, அங்கே இருந்த மிருத்யுவிடம், "நீ இங்கேயே இருப்பாயாக. நான் இவனைக் கொல்கிறேன்" என்று கூறினான்.(32)

பிறகு, குரோதத்தில் சிவந்த கண்களுடன் கூடிய வைவஸ்வத பிரபு, அமோகமான {வீண் போகாத} காலதண்டத்தைத் தன் கையில் எடுத்து ஓங்கினான்.(33) எதன் பக்கவாட்டுகளில் காலபாசங்கள் முழுவதும் நிலைபெற்றிருக்குமோ, {எதன்} அருகில் பாவகனுக்கும், அசனிக்கும் {நெருப்புக்கும், இடிக்கும்} ஒப்பான பிரகாசமுடைய முத்கரம் மூர்த்திமானாக {உலக்கை ஆயுதம் வடிவம் தாங்கி} வீற்றிருக்குமோ,(34) எது பார்வைக்கு இலக்கான உடனேயே பிராணிகளின் பிராணன்கள் பறிக்கப்படுமோ, அதனால் {அந்தக் காலதண்டத்தால்} தீண்டப்பட்ட பிறகோ, வீழ்த்தப்பட்ட பிறகோ என்னவாகும் என்று சொல்லவும் கூடுமோ?(35) பலவானான அவனால் {யமனால்} தீண்டப்பட்டதும், ஜுவாலைகளால் சூழப்பட்ட அந்தப் பேராயுதம் {காலதண்டம்}, ராக்ஷசனை எரிப்பது போல அதிர்ந்தது {கொழுந்துவிட்டு எரிந்தது}.(36) அப்போது, போர்க்களத்தில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர். மேலும், யமன் தன் தண்டத்தை ஓங்கி நிற்பதைக் கண்டு, ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் கலக்கமடைந்தனர்.(37)

யமன் தன் தண்டத்தால் ராவணனைத் தாக்க முனைந்த போது, சாக்ஷாத் பிதாமஹனே {பிரம்மனே} நேரில் தோன்றி இதைக் கூறினான்:(38) "வைவஸ்வதா {சூரியனின் மகனே, யமனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, அமிதவிக்ரமா {எல்லையற்ற வலிமையைக் கொண்டவனே}, இது நிச்சயம் கூடாது. அந்த தண்டத்தால் நீ இந்த நிசாசரனை {இரவுலாவியான ராவணனைக்} கொல்லக்கூடாது.(39) திரிதசபுங்கவா {தேவர்களில் முதன்மையானவனே}, என்னால் இவனுக்கு வரம் நிச்சயமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய என்னால் எவை சொல்லப்பட்டனவோ, அந்தச் சொற்களைப் பொய்யாக்கும் காரியத்தை நீ செய்யலாகாது.(40) தேவனோ, மானுஷனோ, எவன், என்னைப் பொய்யனாகச் செய்வானோ, அவனால் மூன்று உலகங்களும் பொய்யாக்கப்படும் {அழிக்கப்படும்}. இதில் சந்தேகம் இல்லை.(41) 

மூவுலகங்களுக்கும் பயத்தை விளைவிக்கக்கூடிய ரௌத்திரமான இதை {காலதண்டத்தைக்} குரோதத்துடன் நீ ஏவினால், பிரியமானவர், பிரியமற்றவர் என்ற வேறுபாடின்றி பிரஜைகளை அழித்துவிடும்.(42) ஏனெனில், சர்வ பிராணிகளிடத்தும் அமோகமானதும் {வீண் போகாததும்}, அமிதப்ரபையை {எல்லையற்ற ஒளியைக்} கொண்டதுமான இந்தக் காலதண்டம், பூர்வத்தில் மிருத்யுவை {மரண தேவனை} முன்னிறுத்தி என்னால் சிருஷ்டிக்கப்பட்டது.(43) எனவே, சௌம்யா, உன்னால் இது {காலதண்டம்} நிச்சயமாக ராவணனின் தலையில் ஏவப்படக்கூடாது. ஏனெனில் இது {ஒருவன் மீது} விழுந்தால் எவனும் ஒரு முஹூர்த்தம் கூட ஜீவித்திருக்கமாட்டான்.(44) இது {காலதண்டம்} விழுந்தும் இந்த ராக்ஷசன் மரிக்காமல் போகலாம்[3]; அல்லது இந்த தசக்ரீவன் மரித்தும் போகலாம். {மரித்தால் நான் ராவணனுக்குத் தந்த வரம் பொய்த்துப் போகும். மரிக்காமல் போனால் மரணத்தை முன்னிறுத்திச் செய்த காலதண்டம் பொய்த்ததாகும். எனவே}, இவ்விரு நிலைகளிலும் பொய்மையே உண்டாகும்.(45) எனவே, நீ இந்த உலகங்களைக் காக்கக் கருதினால், லங்கேசனை {ராவணனை} நோக்கி நீ ஏவியிருக்கும் இந்த தண்டத்தைத் திரும்பப் பெறுவாயாக. மேலும் என்னை சத்தியவானாக்குவாயாக" {என்றான் பிரம்மன்}.(46) 

[3] திண் தடம்புயத் தென்னிலங்காதிபன்
பண்டு பெற்ற வரத்தின் பலத்தினால்
தண்டு நீ விடின் ஆங்கவன் தன் உயிர்
உண்டிடாது விடுதல் ஒழிதியால்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 404ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: "திண்மையான பெருந்தோள்களைக் கொண்ட தென்னிலங்கையின் அதிபன் {ராவணன்}, முன்பு {தபம் செய்து} பெற்ற வரத்தின் வலிமையால், {கால} தண்டத்தை நீ விட்டாலும் அஃது அவன் உயிரை உண்ணாது. {எனவே, அதை} விடுவதை நிறுத்துவாயாக" {என்றான் யமனிடம் பிரம்மன்}

மேலும், இவ்வாறு சொல்லப்பட்ட போது, தர்மாத்மாவான யமன் {பின்வருமாறு} அவனுக்கு மறுமொழி கூறினான், "இதோ இந்த தண்டம் திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் நீரே எங்களை ஆளும் {அதிகாரம் கொண்ட} பிரபுவாக இருக்கிறீர்.(47) இப்போது போர்க்களத்தில் நின்று கொண்டு, நான் செய்வதற்கு சாத்தியமானது என்ன? வரத்தை முன்னிறுத்தி வரும் இவன் {ராவணன்} என்னால் வதம் செய்யத் தக்கவனல்லன்.(48) எனவே, இதோ இந்த ராக்ஷசனின் பார்வையிலிருந்து மறைந்து போகிறேன்" என்று கூறிவிட்டு, தன் ரதத்துடனும் {தேருடனும்}, தன் அஷ்வங்களுடனும் {குதிரைகளுடனும்} அங்கேயே அப்போதே {யமன்} மறைந்து போனான்.(49)

ஆனால் தசக்ரீவனோ, அவனை {யமனை} வென்றுவிட்டதாக {அறிவிக்கும் வகையில்} தன் பெயரை முழங்கியபடியே, மீண்டும் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறி யமசாதனத்திலிருந்து {யமனின் இருப்பிடத்திலிருந்து} வெளியேறினான்.(50) அந்த வைவஸ்வதன் {சூரியனின் மகனான யமன்}, பிரம்மனை முன்னிறுத்திக் கொண்டு தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் திரிதிவத்திற்கு {தேவலோகத்திற்குச்} சென்றான்; நாரத மஹாமுனியும் {அவ்வாறே யமனுடன் சென்றார்}.(51) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 022ல் உள்ள சுலோகங்கள்: 51

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அனரண்யன் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கேதுமதி கைகசி சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தேவவர்ணினி நந்தி நாரதர் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி