Wednesday, 27 May 2026

பாசுபதாஸ்திரம் | சர்க்கம் – 021 (46)

Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...

Ravana Yama war in a Yamaloka

இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2) 

அந்த யமன், அங்கே வந்து சேர்ந்த நாரத மஹரிஷியைக் கண்டு, தர்மத்திற்கிணங்க அர்க்யம் {முகம், கைகளைக் கழுவுவதற்கான நீரை} அளித்து, அவரை சுகமாக அமரச் செய்து, {பின்வருமாறு} கூறினான்:(3) "தேவரிஷியே, எங்கும் க்ஷேமமா {நலமா}? தர்மம் எங்கும் நசியாமல் இருக்கிறதா? தேவ, கந்தர்வர்களால் சேவிக்கப்படுபவரே, இங்கே வந்ததற்கான உமது காரியம் என்ன?" {என்று கேட்டான் யமன்}.(4)

அப்போது, பகவானான நாரத ரிஷி {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார், "நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. பிறகு, விதானத்தை விதிப்பாயாக {செய்ய வேண்டியதைச் செய்வாயாக}.(5) பித்ருராஜாவே {மூதாதையரின் மன்னா}, தசக்ரீவன்  என்ற நாமத்தைக் கொண்ட இந்த நிசாசரன் {பத்துக் கழுத்துகளைக் கொண்டவனும், இரவுலாவியுமான இந்த ராவணன்}, எளிதில் வெல்வதற்கரியவனான உன்னைத் தன் விக்ரமத்தால் வசப்படுத்த இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(6) பிரபோ, இந்தக் காரணத்தாலேயே நான் துரிதமாக இங்கே வந்து சேர்ந்தேன். தண்டத்தை {காலதண்டத்தை} ஆயுதமாகக் கொண்ட உனக்கு இன்று என்ன நேரப் போகிறதோ?" {என்றார் நாரதர்}.(7)

இதற்கிடையில், உதிக்கும் அம்சுமந்தனை {சூரியனைப்} போல ஒளிரும் அந்த ராக்ஷசனின் விமானம் {ராவணனின் புஷ்பக விமானம்} வந்து கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து அவர்கள் கண்டனர்.(8) மஹாபலவானான அவன் {ராவணன்}, தன் புஷ்பகத்தின் பிரபையால் {ஒளியால்} அந்த இடம் முழுவதையும் இருளற்றதாகச் செய்தபடியே சமீபத்தில் வந்து சேர்ந்தான்.(9) மஹாபாஹுவான அந்த தசக்ரீவன், அங்கேயும், இங்கேயும் பிராணிகள் {உயிரினங்கள்}, தங்களின் நல்வினைகளுக்கும், தீவினைகளுக்கும் உரிய கர்மத்தை {புண்ணிய, பாபங்களின் பலன்களை} அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(10) அவன் {ராவணன்}, பயத்தை ஏற்படுத்துபவர்களும், உக்கிரமானவர்களும், கோர ரூபம் உடையவர்களும், யமனின் அனுசரர்கள், பணியாட்களுடன், அந்த யமனின் சைனிகர்களையும் {படைவீரர்களையும்} பார்த்தான்.(11) 

அங்கே வதைக்கப்படுபவர்களும், துன்புறுத்தப்படுபவர்களுமான தேஹிகளையும் {பாவம் செய்த பூவுலக மனிதர்களையும்} அவன் கண்டான். அவர்கள், தீவிர வலியால் கூச்சலிட்டுக் கொண்டும், மஹாநாதத்துடன் {பெரும் முழக்கத்துடன்} கதறிக் கொண்டும் இருந்தனர்.(12) அவர்கள் கிருமிகளாலும், கொடூரமான நோய்களாலும் பக்ஷிக்கப்பட்டனர் {உண்ணப்பட்டனர்}.(13) மேலும் அவர்கள், கேட்க வேதனை அளிப்பவையும், பயத்தை ஏற்படுத்துபவையுமான சொற்களைப் பேசிக் கொண்டும், சோணிதத்தை {ரத்தத்தை} நீராகக் கொண்ட வைதரணீயை {வைதரணியாற்றைப்} பலமுறை கடந்து கொண்டும் இருந்தனர்.(14) அதார்மிகர்கள் {பாபிகள்}, கொதிக்கும் மணலில் {தப்த வாலுகா என்றழைக்கப்படும் கொதிக்கும் மணல் நகரத்தில்} மீண்டும் மீண்டும் வெந்து துடித்தனர்; அசிபத்ர வனத்தில் {கத்தி போன்ற இலைகளைக் கொண்ட காட்டில் / நரகத்தில்} பிளக்கவும் பட்டனர்.(15) ரௌரவத்திலும் {என்ற பயங்கர நரகத்திலும்}, க்ஷார நதியிலும் {அரிக்கும் நீரைக் கொண்ட ஆற்றிலும்}, க்ஷுர தாரைகளிலும் {சவரக்கத்தி போன்ற கூர்மையான விளிம்புகளைக் கொண்ட நரகத்திலும்}, தண்ணீரை யாசிப்பவர்களும், தாகத்தில் தவிப்பவர்களும், பசியால் வாடுபவர்களும் இருந்தனர்.(16) சவ பூதங்களும் {உயிரற்றது போன்ற உடல்களுடையவர்களும்}, மெலிந்தவர்களும், வர்ணமிழந்தவர்களும், கலைந்த தலைமுடி கொண்டவர்களும், அழுக்கும், சேறும் நிறைந்த உடலைக் கொண்டவர்களும், தீனர்களும், வறண்டவர்களும், {பயத்தால் அங்கும் இங்கும்} ஓடிக் கொண்டிருப்பவர்களும் அங்கே இருந்தனர்.(17)

இராவணன் தன் மார்க்கத்தில், நூற்றுக் கணக்கானவர்களையும், ஆயிரக் கணக்கானவர்களையும் கண்டான். அவர்களில் சிலர், தங்கள் சொந்த நல்வினைகளால் முக்கிய கிருஹங்களில் {சிறந்த மாளிகைகளில்}, கீத, வாத்திய ஒலிகளுடன், ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பதையும் ராவணன் கண்டான்.(18) கோக்களை {பசுக்களை} தானம் செய்தவர்கள் பசுக்களின் ரசங்களையும் {பால், நெய் போன்றவற்றையும்}, அன்னத்தை {உணவை} தானம் செய்தவர்கள் அன்னத்தையும், கிருஹங்களை {வீடுகளை} தானம் செய்தவர்கள் கிருஹங்களையும் எனத் தங்கள் சொந்த கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.(19)  சுவர்ணம், மணி {ரத்தினம்}, முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமதைகள் {அழகிய பெண்கள் அவர்களைச்} சூழ்ந்திருந்தனர்.(20) மஹாபாஹுவான அந்த ராக்ஷசாதிபன் ராவணன், தார்மிகர்களையும், தங்கள் சொந்த தேஜஸ்ஸினால் ஒளிரும் வேறு சிலரையும் அங்கே கண்டான்.(21) 

பிறகு, பலவானான ராவணன், தங்கள் சொந்த தீவினைகளின் கர்மத்தால் {நரகத்தின் யமதூதர்களால்} உடல் கிழிக்கப்பட்டுத் துன்புறுபவர்களைத் தன் விக்ரமத்தால் பலவந்தமாக விடுவித்தான்.(22) இராக்ஷசனான அந்த தசக்ரீவனால் விடுவிக்கப்பட்ட அந்தப் பிராணிகள் {உயிரினங்கள்}, எதிர்பாராததும், சிந்தனைக்கு எட்டாததுமான சுகத்தை ஒரு முஹூர்த்த காலம் அடைந்தன.(23) பெரும் புகழ்மிக்கவனான ராக்ஷசனால் பிரேதர்கள் {இறந்த பிறகு நரகத்திற்குச் சென்றவர்கள்} விடுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, பிரேத கோபர்கள் {அந்தப் பிரேதர்களைக் காப்பவர்களான யமதூதர்கள்} பெருங்குரோதமடைந்து ராக்ஷசேந்திரனை {ராவணனை} நோக்கிப் பாய்ந்தனர்.(24) 

பிறகு, தர்மராஜனின் {யமனின்} படைவீரர்களான சூரர்கள் ஓடிவந்தபோது, சர்வ திக்குகளில் இருந்தும் ஹல, ஹலா என்ற {ஆரவார} சப்தம் எழுந்தது.(25) நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான அந்த சூரர்கள், பிராசங்கள், பரிகங்கள், சூலங்கள், முசலங்கள், சக்திகள், தோமரங்கள் ஆகியவற்றை புஷ்பகத்தின் {ராவணனின் புஷ்பக விமானத்தின்} மீது பொழிந்து தாக்கினர்.(26) அவர்கள், தேனீக்களைப் போல அந்தப் புஷ்பகத்தின் ஆசனங்களையும், பிராசாதங்களையும் {மாளிகைகளையும்}, வேதிகைகளையும் {மேடைகளையும்}, தோரணங்களையும் சீக்கிரமாக உடைத்து நொறுக்கினர்.(27) தேவர்களின் உறைவிடமான அந்தப் புஷ்பகம், போர்க்களத்தில் உடைத்துச் சிதைக்கப்பட்டாலும், அது பிரம்ம தேஜஸ்ஸினால் {பிரம்மனின் ஆற்றலால்} எப்போதும் போல அக்ஷயமாக {அழிவற்றதாக} இருந்தது.(28)

அந்த மஹாத்மாவின் சேனை, எண்ணற்றதாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தது. அதன் முன்னணியில் நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான சூரர்கள் இருந்தனர்.(29) பிறகு, சூரர்களான அவனது அமைச்சர்களும், ராஜாவான அந்த தசானனனும் {பத்து முகங்களைக் கொண்ட ராவணனும்}, நூற்றுக்கணக்கான விருக்ஷங்கள், சைலங்கள், பிராசாதங்கள் {மரங்கள், மலைகள், மாளிகைகள்} ஆகியவற்றைக் கொண்டு, தங்கள் விருப்பத்திற்கும், பலத்திற்கும் தகுந்தபடி போரிட்டனர்.(30) அந்த ராக்ஷசேந்திரனின் அமைச்சர்கள், சர்வ சஸ்திரங்களாலும் பலமாகத் தாக்கப்பட்டவர்களாக, சோணிதம் {ரத்தம்} தோய்ந்த அங்கங்களுடையவர்களாக மஹத்தான போரைச் செய்தனர்.(31) மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்ட ராமா}, மஹாபாகர்களான யமனுடையவர்களும் {பெரும் பராக்கிரமசாலிகளான யமனுடைய வீரர்களும்}, ராவணனுடைய மந்திரிகளும் அன்யோன்யம் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.(32) 

மஹாபலவான்களான யமதர்மனுடைய படைவீரர்கள், {ராவணனின்} அந்த அமைச்சர்களை விட்டுவிட்டு, அந்த தசானனனையே {பத்து முகங்களைக் கொண்ட ராவணனையே} நோக்கி, சூலங்களை மழையாகப் பொழிந்தபடி பாய்ந்து சென்றனர்.(33) பிறகு, அந்த ராக்ஷசாதிபன், அந்தத் தாக்குதல்களால் உடல் பிளக்கப்பட்டு, சோணிதம் தோய்ந்த அங்கங்களுடன் முற்றும் மலர்ந்த அசோகத்தை {அசோக மரத்தைப்} போல அந்தப் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} காட்சியளித்தான்.(34) பலவானான அவன் {ராவணன்}, தன் அஸ்திர பலத்தால் சூலங்கள், கதைகள் {கதாயுதங்கள்}, பாசங்கள் {பாசக் கயிறுகள்}, சக்திகள் {வேல்கள்}, தோமரங்கள், சாயகங்கள் {கணைகள்}, முசலங்கள் {உலக்கைகள்}, பாறைகள், விருக்ஷங்கள் {மரங்கள்} ஆகியவற்றைப் பொழிந்தான்.(35) மரங்கள், பாறைகள், சஸ்திரங்கள் ஆகியவற்றின் அந்த மிகக் கடும் வர்ஷம் {மழை} தரணீதலத்தில் {பூமியின் பரப்பில்} யம சைனியத்தின் மீது விழுந்தது.(36) நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான அவர்கள் {யம சைனியத்தினர்}, அவை அனைத்தையும் நொறுக்கி, அவனுடைய {ராவணனின்} அஸ்திரங்களையும் தடுத்து, கோரமானவனும், ஏகனுமான {தனியனுமான} அந்த ராக்ஷசனை {ராவணனைத்} தாக்கினர்.(37) 

பெரும் மேகக் கூட்டங்களால் {சூழப்படும்} சைலத்தை {மலையைப்} போல, பிண்டிபாலங்கள், சூலங்கள் ஆகியவற்றால் மூச்சு விட முடியாதபடி, அவனைச் சூழ்ந்து கொண்டு பலமாகத் தாக்கினர்.(38) கவசம் அவிழ்ந்தவனும், குரோதமடைந்தவனும், பெருகி ஓடும் சோணிதத்தால் {குருதியால்} நனைக்கப்பட்டவனுமான அவன் {ராவணன்}, புஷ்பகத்தை விட்டுவிட்டு, பிருத்வியில் {தரையில்} நின்றான்.(39) பிறகு அவன், கார்முகத்தை {வில்லை} ஏந்தி, பாணங்களைக் கையில் எடுத்து சமரில் {போர்களத்தில்} முன்னேறி வந்தான். ஒரு முஹூர்த்தத்திற்குள் நனவு மீண்டு, குரோதமடைந்த அந்தகனைப் போல் நின்றான்.(40) அவன் {ராவணன்}, திவ்யமான பாசுபத அஸ்திரத்தைத் தன் கார்முகத்தில் பூட்டியபிறகு, "நிற்பீராக, நிற்பீராக" என்று அவர்களிடம் கூறிவிட்டு, அந்த சாபத்தை {வில் வளையும் வகையில்} இழுத்தான்.(41) அப்போது, அந்த இந்திர அரி {இந்திரனின் பகைவனான ராவணன்}, போர்க்களத்தில் சாபத்தை {வில்லைத்} தன் காது வரை இழுத்து, திரிபுரத்தில் சங்கரனை {சிவனைப்} போலக் குரோதத்துடன் அந்த சரத்தை {பாசுபதாஸ்திரத்தை} ஏவினான்[1].(42) 

[1] வரிசிலை கையில் வாங்கி வாள் எயிற்று அரக்கன் ஈசன்
பொருபடை விடுதலோடும் பொங்கு எரி பரந்து மண்டத்
தருமன் வெஞ்சேனை தாவத் தாவியது ஆலம் என்னத்
திரிபுரம் என்ன வெந்து தீய்ந்தனர் சிலைக்கை வீரர்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 392ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: வாள் போன்ற பற்களையுடைய ராக்ஷசன் {ராவணன்}, ஈசனின் ஆயுதத்தை {பாசுபதத்தை} ஏவியதும், அது பெருந்தீயைப் பரப்பி, நெருங்கி {யம} தர்மனின் கொடிய சேனை தாவி ஓடுமாறு, நஞ்சுபோலத் தாவிச் சென்றது. வில்லேந்திய கைகளுடன் கூடிய யமனின் சேனைவீரர்கள் திரிபுரம் எரிந்தது போல வெந்து தீய்ந்தனர்.

அந்த சரத்தின் ரூபம் {கணையின் வடிவம்}, கோடைகால வனத்தை எரிப்பதும், எங்கும் பரவி எழுவதுமான காட்டுத் தீயைப் போல, புகையில்லாத ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது.(43) இரணத்தில் {போர்க்களத்தில்} ஏவப்பட்ட அவனுடைய அந்தச் சரம் {பாசுபதாஸ்திரம்}, ஜுவாலைகளை {நெருப்புச் சுடர்களை} மாலையாகக் கொண்டு, ஊனுண்ணும் விலங்குகளால் பின்தொடரப்பட்டு, புதர்களையும், பெரும் மரங்களையும் பஸ்மம் {சாம்பல்} ஆக்கிவிட்டுப் பாய்ந்து சென்றது.(44) வைவஸ்வதனின் {விவஸ்வான் என்றழைக்கப்படும் சூரியனின் மகனான யமனின்} அந்த சைனியத்தினர், அந்த ரணத்தில், அதன் தேஜஸ்ஸால் {பாசுபதாஸ்திரத்தின் நெருப்பொளியால்} எரிக்கப்பட்டு, காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட மரங்களைப் போல {மடிந்து} விழுந்தனர்.(45) பிறகு, பீம விக்ரமனான ராக்ஷசன் {பயங்கர வலிமையுடன் கூடிய ராக்ஷசன் ராவணன்}, தன் அமைச்சர்களுடன் சேர்ந்து, இந்த மேதினியை நடுங்கச் செய்பவனைப் போல மஹாநாதம் எழுப்பினான் {பெரும் முழக்கம் செய்தான்}.(46) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 021ல் உள்ள சுலோகங்கள்: 46

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அனரண்யன் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கேதுமதி கைகசி சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தேவவர்ணினி நந்தி நாரதர் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி